மாடல் அழகி ஒருவர், தனது கண்ணைக் கருப்பு நிற டாட்டூ இன்க் கொண்டு மாற்றம் செய்துள்ளார். இதனால் அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. மீதமிருக்கும் இன்னொரு கண்ணிலும் சீக்கிரமே பார்வையை இழக்க உள்ளார் அந்தப் பெண். போலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாந்திரா சாடோஸ்கா என்பவர்தான் இந்த பரிதாபத்திற்குரிய நபர்.
அலெக்சாந்திரா, ராப் கலைஞர் போபெக்-ன் கருப்பு நிற கண் போல தன் விழியும் மாற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காகக் கருப்பு நிற டாட்டூ இன்க் கொண்டு கண்ணை மாற்றியுள்ளார். இப்படி கண் விழியில் டாட்டூ செய்வதை செக்லீரல் டாட்டூ என்று அழைப்பர். இதன் மூலம் ஒருவர் கண்ணை நிரந்தரமாக வேறொரு நிறத்திற்கு மாற்ற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் வரும் பின்விளைவுகள் பற்றிச் சரியாகத் தெரியவில்லை.
டெய்லி மெயில் கொடுக்கும் தகவல்படி, 25 வயதாகும் அலெக்சாந்திரா, கண்ணைக் கருப்பாக்கும் டாட்டூ செய்து கொண்ட பின்னர், கண் வலி காரணமாக அவதிப்பட்டுள்ளார். இப்படி வலி வருவது சாதாரணமான விஷயம்தான் என்றும், வலி நிவாரணி மூலம் அதைச் சரி செய்துவிடலாம் என்றும் கூறியுள்ளார் டாட்டூ குத்திய நபரான பியோட்டர் ஏ. ஆனால் அது சரியாகவில்லை. இப்போது அலெக்சாந்திராவின் பார்வை பறிபோயுள்ளதைத் தொடர்ந்து டாட்டூ குத்திய நபர், 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கண்ணைக் கருப்பாக்குவதற்கு உடம்பில் பயன்படுத்தப்படும் டாட்டூ இன்க் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அலெக்சாந்திரா, தன் கண் பார்வையைத் திரும்பப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அது முடியாத காரியமென்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட அலெக்சாந்திரா, “துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் எனக்கு எந்தவித நேர்மறையான தகவல்களையும் கொடுக்கவில்லை. கண்ணில் ஏற்பட்டது மிகப் பெரும் பாதிப்பு எனப்படுகிறது. எனது பார்வை முற்றிலும் போய்விடுமோ எனப் பயமாக இருக்கிறது,” என்று கவலைப்படுகிறார்.