ஜப்பானைச் சேர்ந்த கோடீஸ்வரர் யசுகு மேசாவா (Yusaku Maezawa) தான் நிலாவுக்குப் போகப் போகும் முதல் சுற்றுலா பயணி என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலாவுக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப ஒரு பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கும் பணியை வெகு நாட்களாக செய்து வருகிறது. வரும் 2023 ஆம் ஆண்டு, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ராக்கெட் தயாராகிவிடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த ராக்கெட்டில் செல்ல உள்ள முதல் சுற்றுலா பயணி மேசாவா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. அதில் மேசாவா மற்றும் மஸ்க் கலந்து கொண்டு பேசினர்.
மேசாவா பேசும்போது, ‘சிறு வயது முதலே நான் நிலா மீது காதல் வயப்பட்டுள்ளேன். இது என் வாழ்நாள் கனவு ஆகும். இந்தப் பயணத்தில் என்னுடன் வர 6 முதல் 8 கலைஞர்களுக்கும் நான் அழைப்பு விடுப்பேன். நிலாவுக்கு சென்று திரும்பி வந்த பிறகு, அவர்கள் கலைநயத்துடன் ஒரு விஷயத்தை உருவாக்குவார்கள். அது மிகவும் தனித்துவமானதாக இருக்கும்’ என்று மிகுந்த உற்சாகத்துடன் சொன்னார்.
இதையடுத்து பேசிய எலோன் மஸ்க், ‘மேசாவா ஒரு தைரியசாலி. புது விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கிறது. அவராகவே வந்து இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளார். அவரின் செயல் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மேசாவா, எங்களுக்கு இந்த நிலா ட்ரிப்புக்காக எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை சொல்ல மாட்டோம். ஆனால், அவருடன் அழைத்துச் செல்ல உள்ள கலைஞர்களுக்கு இந்தப் பயணம் இலவசமானதாகவே இருக்கும்’ என்றவர்,
‘இந்தப் பயணம் ஆபத்தானது தான். ஒரு புதிய விஷயத்தை செய்யும் போது, அது பல விளைவுகளை கொடுக்கும். சில விஷயங்கள் தவறாக போகலாம்’ என்று எச்சரித்தார்.
அப்போது மஸ்க்கிடம், ‘நீங்களும் இந்தப் பயணத்தில் நிலாவுக்குப் போவீர்களா?’ என்று கேட்டதற்கு, மேசாவா, ‘அவர் கண்டிப்பாக வருவார்’ என்றார். அதை மஸ்க்கும் ஆமோதித்தார்.
நிலாவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் ராக்கெட்டின் டிசைனை செய்தியாளர்களிடம் காண்பித்த மஸ்க், ராக்கெட்டின் முழு கட்டுமானத்துக்கு 5 பில்லியன் டாலர்கள் செலவு ஆகும் என்று கூறினார்.